Friday, November 11, 2016

Crony capitalism

Read this fully to know what crony capitalism is.

The Masterstroke Policy of Demonetization:

The media is hailing MODI’s demonetization of old 500 and 1000Rs note as a masterstroke policy on curbing the menace of black money.
Really??
Hmmmm...

Let’s have a look into few figures.

• What if I told you that total Bad Loans of Indian Banks right now is close to Rs. 6,00,000 crore.
• What if I told you that PSU Banks are in a miserable condition right now, and need immediate infusion of money to shore up their lending capacities?
• What if I told you that few weeks back credit rating agency Moody’s had stated that Indian Banks require Rs. 1.25 lakh crore capital infusion?
• What if I told you that in July 2016 the Centre injected 23,000 crore into 13 Public Sector Banks?
• What if I told you that Jaitley said it in 2015 that the Centre would pump in more than 70,000 crore in PSU banks in coming 4 years?
And.
What if I told you that this demonetization is nothing but a measure to infuse money in those ailing Banks so as to shore up their lending capacities?
.
Can’t you see people queuing up banks to deposit their hard earned money, waiting hours for their turn?
What other “Masterstroke” would have made this possible? 
Just trigger the panic button by stating that your old 500 and 1000Rs.  currency is no longer a valid legal tender, and
Voila!!! People are queuing up since morning to deposit their hard earned money.
What for?
To curb the menace of black money? By bringing in new Rs. 2000 note?
You don’t curb black money by bringing in notes of higher denomination.
In fact, you are now simplifying hoarding of black money by bringing in new notes of higher denomination.
.
Ok. So what would banks do with the fresh infusion of money from public pockets?
Lend of course. That’s what their business is.
And to whom would these banks then lend their money to?
You? Me?
So sweet of you :p
.
You are in the deposit queue dear.
.
The following are in withdrawal queue:
(Note: the figures in bracket are their present repayable amount which they owe to various banks)
10. GVK Reddy (GVK Group) (33933 Crores)
9. Venugopal Dhoot (Videocon Group) (45405 Crores)
8. L. Madhusoodan Rao (Lanco Group) (47102 Crores)
7. G M Rao (GMR Group) (47976 Crores)
6. Sajjan Jindal (JSW Group) (58171 Crores)
5. Manoj Gour (Jaypee Group) (75163 Crores)
4. Goutam Adani (Adani Group) (96031 Crores)
3. Shashi Ruia & Ravi Ruia (Essar Group) (101000 Crores)
2. Anil Aggarwal (The Vedanta Group) (103000 Crores)
And
Finally
1. Anil Ambani (Reliance Group)(125000 Crores)

MODI's govt. just carried out a surgical strike in your pockets, and now you are running like chickens.

That’s how crony capitalism works.
Now call me whatever you like- Marxist, Communist, Anarchist, Congi agent, Conspiracy theorist blah blah blah blah

பணம் என்பது வெற்றுக் காகிதம்தான்!

பணம் என்பது வெற்றுக் காகிதம்தான்!
-கருப்புப் பண ’ஒழிப்புப் போர்’ குறித்து…

ம.செந்தமிழன்

முற்காலத்தில் இருந்த வெள்ளி, பொன், செப்பு நாணயங்கள் அவற்றுக்கான மதிப்பைத் தாங்கியிருந்தன. அதாவது, ஒரு பொற்காசு என்றால், அக்காசில் தங்கத்தின் எடை அதன் மதிப்பிற்கேற்ப இருந்தது. ஒரு மூட்டை நெல் வாங்க வேண்டுமானால், அரை பொற்காசு விலை கொடுக்க வேண்டும் என வைத்துக்கொள்வோம். அந்த அரை பொற்காசில் இருக்கும் தங்கத்தை விலைக்கு விற்று, வெள்ளி அல்லது செப்பு நாணயங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்வதானால், அக்காலத்தில் இருந்த நாணயங்கள் வெற்றுக் காகிதங்கள் அல்ல. மாறாக, நாணயங்களே மதிப்புமிக்க செல்வங்களாக இருந்தன.

‘இன்று முதல் பொற்காசுகள் செல்லுபடியாகாது’ என்று அறிவிக்கும் அகந்தையும் தேவையும் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இருக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு அறிவித்தாலும், அப் பொற்காசுகளை உருக்கித் தங்கமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆக, செல்வம் மக்களிடத்திலும் இருந்தது, அரசு அதிகாரத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, பணத்தைச் சேர்த்து வைக்கக் கூடாது என்ற வழக்கத்தில் நானும் என் குடும்பத்தினரும் வாழ்ந்துவருகிறோம். தேவைகள் அனைத்தும் பரம்பொருளால் நிறைவேற்றப்படும் என்பதை நம்பிக்கையாக அல்ல, உணர்வாகக்கொண்டிருக்கிறோம். செம்மைவனத்தை முன்னிறுத்திப் பல பணிகள் செய்கிறோம். வருவாயை அவ்வப்போது செலவிடுகிறோம். இந்த வாழ்க்கையில் நாங்கள் அடையும் இன்பங்கள் அதிகம். ஒருசில அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்த அவமானங்கள் வழியாகத்தான் இந்தச் சமூகத்தை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

கருப்புப் பணம் குவிவதைப் பற்றியோ, அதற்கு எதிராக மக்கள் முன்வைக்கும் கருத்துகளைப் பற்றியோ தனிப்பட்ட முறையில் நான் கவலைப்பட ஏதுமில்லை. எனக்கென விதிக்கப்பட்டுள்ள சமூகக் கடமைகளில் ஒன்றாக, சில உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இப்பதிவு அதற்கானதுதான்.

இப்போதுள்ள பணம் எனும் கருவி, ஒரு வெற்றுக் காகிதம். இக்காகிதத்தின் முழுக் கட்டுப்பாடும் அரசாங்கத்தின் பிடியில் உள்ளது. அரசாங்கமோ பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அக்காலம் போல, இந்த நாணயங்களுக்கென சுய மதிப்பு இல்லை. நீங்கள் அதிகம் படித்தவர்கள் என்பதால், உங்களுக்குக் கூடுதலான விளக்கம் தேவைப்படும் என நினைக்கிறேன்.

100 ரூபாய் உங்கள் ஊதியம் என்றால், அதன் உண்மையான மதிப்பைப் பின்வருமாறுதான் கணக்கிட வேண்டும்.
வருவாயில் பிடிக்கப்படும் வரி (TDS) – ரூ. 10 (சராசரி மதிப்பு)
தற்போதைய பணவீக்கம் தோராயமாக, 8.5% என்ற வகையில் – ரூ. 8.50
இந்த இரு பிடித்தங்களையும் உங்களால் தவிர்க்கவே இயலாது. ஏனெனில், இவை இரண்டும் அரசுத் துறைகளால் செய்யப்படுபவை. பணவீக்கம் என்பது என்னவென்றால், 100 ரூபாயில் ரூ.8.50 அளவிற்கு மதிப்பற்ற நிலை உள்ளது என்பதாகும். 100 ரூபாய் உங்களிடம் இருந்தால், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமைப்படி அதன் உண்மையான மதிப்பு, ரூ.91.50 மட்டும்தான். இதுதான் விலைவாசி உயர்வின் அடிப்படைக் காரணி. வரியைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆக, 100 ரூபாய் உங்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டால், அதன் மதிப்பு சராசரியாக, வெறும் ரூ.87 .50/- மட்டும்தான். ஒரு இலட்சம் ரூபாய் உங்களுக்குக் கிடைக்கிறதெனில், உண்மையில் நீங்கள் பெற்ற தொகை ரூ.ரூ.87,500/- மீதமுள்ள தொகையை வரியாகவும், பண வீக்கம் என்ற பேரில் பல்வேறு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்கின்றன.

நீங்கள் உழைக்கிறீர்கள், பணியாற்றுகிறீர்கள். உங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வருவாய் என்பது, உண்மையான மதிப்பே இல்லாத வெற்றுக் காகிதம். அந்தக் காகிதத்திற்கு என்ன மதிப்பு என்பதை அவ்வப்போது முடிவு செய்வதுதான் சேமவங்கி (ரிசர்வ் வங்கி) ஆற்றும் முதல் கடமை.

உங்களில் பெரும்பகுதியினர் கடன் பொருளாதாரத்தில் இருப்பதாக நினைக்கிறேன். வீடு, வாகனங்கள், செல்பேசிகள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் இப்போது கடனில் வாங்கப்படுகின்றன. அவற்றுக்கான வட்டி விகிதங்களை மேற்கண்ட 100 ரூபாயிலிருந்து கழித்துவிடுங்கள். தோராயமாக நீங்கள் செலுத்தும் வட்டி விகிதம் 14% என்றால், உங்கள் கையிருப்பு மதிப்பு ரூ.73.50/- உண்மையில் எல்லாக் கடன்களின் கூட்டு வட்டியும் மிக மிக அதிகமானவை. அது பெரும் கதை என்பதால், நீங்கள் நம்பிக்கொண்டுள்ளதைப்போலவே 14% என்ற கணக்கை மட்டும் கூறுகிறேன்.

தங்கம் வாங்கும் உன்னதப் பழக்கத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். தங்கத்தின் மதிப்பைத் தீர்மானிப்பவர்கள்தான் உலகெங்கும் போர்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் ஒரு பவுன் தங்கம் இருந்தால், அதன் பண மதிப்பு என்ன என நீங்கள் முடிவு செய்ய முடியாது. இருபத்து இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து தங்கம் வாங்கிவிட்டால், இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து அதே தங்கத்தின் விலை எவ்வளவாக இருக்கும் என கற்பனை செய்யக் கூட உங்களுக்கு உரிமை இல்லை. ஐந்து ஆண்டுகளில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் உயர்ந்திருந்தால், இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று பொருள். அதாவது, ஆயிரம் ரூபாய்க்கான மதிப்பை இந்தியப் பணம் இழந்துவிட்டது என்று பொருள். அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் சில அரபுநாடுகள்தான் இவ்வாறான பணமதிப்பை இழக்காமல் நீடிக்கின்றன. இந்தியப் பண மதிப்பு வீழ்ந்து வெகு காலம் ஆகிறது. இனி அது நிமிரும் வழி ஏதும் இல்லை.

தங்கம் ஒரு சிறந்த முதலீடு என்ற கதையை நீங்கள் இப்போதும் நம்புகிறீர்கள். நம் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன், ஒரு பவுன் தங்கத்தை விற்றால், ஒருவேலி நிலம் வாங்க முடியும். அப்போது தங்கத்தின் விலை 10 கிராம், ரூ.99/- அதாவது, ஒரு பவுனுக்கும் சற்று அதிகமான தங்கம் 100 ரூபாயை விடக் குறைவாகக் கிடைத்தது. 100 ரூபாயை வைத்து ஒருவேலி நிலம் வாங்க முடியும், ஒரு வீடு கட்ட முடியும், மாட்டு மந்தையை வாங்கலாம், இன்னும் பல மதிப்பு மிக்க செல்வங்களை ஒரு பவுன் தங்கத்திற்கு ஈடாக வாங்கலாம்.

இப்போது சில வளர்ப்பு நாய்களின் விலை ஒரு பவுன் தங்கத்தைவிட அதிகம். தங்கம் இப்போது செல்வமல்ல. அதை நீங்கள் எவ்வளவு சேர்க்கிறீர்களோ அவ்வளவு பணத்தை விரயமாக்குகிறீர்கள் எனப் பொருள். இன்னும் சில காலத்தில் ‘தங்கம் பதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று முதல் தங்கத்தின் மதிப்பு குறைக்கப்படுகிறது’ என்ற ஒற்றை அறிவுப்பு கூட அனைத்துச் சேமிப்புகளையும் முடித்து வைக்கும்.

தங்கத்தை வைத்து உங்களால் சுயமாக ஒரு நகை செய்ய முடியுமா? நகை ஆசாரிகள் இனமே ஏறத்தாழ அழிந்துவிட்டது என்பதைக் கவனித்ததுண்டா? இப்போது நீங்கள் வாங்கும் நகைகளை, பெரும் நகை வணிக நிறுவனங்களில் மட்டும்தான் மாற்றவோ, விற்கவோ முடியும். அவற்றை அழித்து வேறு நகை அல்லது பொருள் செய்ய வேண்டுமானால் அதற்கான மரபுத் தொழில்நுட்ப வல்லுனர்கள் இன்னும் சில காலத்தில் மிஞ்ச மாட்டார்கள்.
நகையை வைத்து என்ன செய்யலாம்? நகையை அடகு வைக்கலாம்.

உலகில் அதிகளவு தங்கம் வைத்திருக்கும் நிறுவனங்களில் இரண்டாவது இடம் வகிப்பது, முத்தூட் (Muthoot) என்பதை அறிவீர்களா?

இதன் பொருள் என்ன? எவ்வளவு அதிகமாக நகை வாங்குகிறீர்களோ அவ்வளவு வேகமாக அவற்றை அடகு வைக்கிறீர்கள். அந்த நிறுவனத்தின் நகைக் கடன் வட்டி விகிதம் சட்ட விரோதமானது. ஏறத்தாழ  24% வட்டியை அந்நிறுவனம் நகைக் கடன்களுக்கு விதிக்கிறது. சட்டவிதிகளை ஏமாற்றுவதற்காக, நகைக் கடன் வட்டி என எழுதாமல், ‘நகை முன் பணம்’ என சீட்டு தருவார்கள்.

வீட்டு மனைகளை வாங்கிக் குவித்த கதை ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது. ஒரு வீடு கட்டுவதற்குக் கூட வங்கிகளில் கடன் வாங்கும் மக்கள், இரண்டு மூன்று வீட்டு மனைகளை வாங்கிப் போடுகிறார்கள். இவர்களது பொருளாதார அறிவை என்னென்று வியப்பது!

கடன் வாங்காமல் வீடு கட்ட வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்குப் பணம் சேர்க்க வேண்டும். பணத்தைப் பணமாக பத்தாண்டுகளுக்கு வைத்திருந்தால், அது பணம் அல்ல, பாதிக் காகிதம். ஏனெனில், பத்தாண்டுகளில் பணவீக்கத்தின் அளவும், இந்தியப் பொருளாதாரத்தின் சரிவும் கற்பனைக்கெட்டாத வகையில் இருக்கும். 1996 , 2006 ஆகிய ஆண்டுகளில் 100 ரூபாய்க்கு இருந்த மதிப்பையும், இப்போது இருக்கும் மதிப்பையும் நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். 2026 ஆம் ஆண்டு, 100 ரூபாய் எனும் ஒரு தாள் இருக்கவே வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, தெரியவில்லை!

ஆக, பணத்தைப் பணமாகச் சேர்ப்பதும் வீட்டில் காகிதக் குப்பைகளைச் சேர்ப்பதும் ஏறத்தாழ ஒன்றுதான். பணத்தைத் தங்கத்தில் போட்டால், தங்க நிறுவனங்கள் கொழிக்கும். பணத்தை வீட்டு மனைகளில் போட்டால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கொழிக்கும், கட்டுமான நிறுவனங்கள் செழிக்கும், கடன் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கும்.

வங்கிகளில் சேமிப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி சராசரியாக 8% என்றளவில் உள்ளது. பணவீக்கமோ இந்த வட்டியை விடக் கூடுதலாக உள்ளது. அதாவது, உங்கள் சேமிப்பை வாங்கி வைத்துக்கொள்ளும் வங்கிகள், உங்களுக்கு அப்பணத்தின் உண்மை மதிப்பை விட குறைவாகத் திருப்பித் தருகின்றன.

500, 1000 ரூபாய்களை வங்கியில் கணக்கு காட்டினால் கருப்புப் பணம் ஒழியும் என்ற புதிய திரைப்படத்தை இரசிப்பவர்களிடம் ஒரு தகவலைக் கூற வேண்டும். கணக்கில் காட்டப்படாத பணம் வைத்திருக்கிறார்களே, அவர்களில் பெரும்பகுதியினர் பின்வரும் ’தொழில்களில்’ ஈடுபடுவோர்தான்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நகை நிறுவனங்கள், வட்டிக்கு விடுதல், நிலவணிகம், அரசியல், மணல் கொள்ளை, மலைக்கொள்ளை, கட்டுமான ஒப்பந்தங்கள்.
மேற்கண்ட ‘தொழில்’களில் ஈட்டிய பணத்தைத்தான் அவர்கள் அடுக்கி வைத்திருக்கிறார்கள். 

இனிமேல் இவர்களிடம் கருப்புப் பணம் சேராது என்று கூறுமளவுக்கு சமூகத்தில் என்ன மாற்றம் நிகழப் போகிறது எனக் கூறுங்கள்.
’இனி என் பிள்ளைகளைப் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கமாட்டேன். சேர்த்தாலும் சட்டப்படியிலான கட்டணம்தான் தருவேன்’ என எல்லோரும் முடிவு செய்துவிட்டீர்களா?
‘இனி அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் தரமாட்டேன்’ என சத்தியம் செய்துவிட்டீர்களா?
‘இனி, என் வீட்டில் மலைக் கற்களை (கிரானைட்) பயன்படுத்தமாட்டேன். இனி கடனில் வீடு வாங்க மாட்டேன். இனி. வட்டிக்குப் பணம் வாங்க மாட்டேன். இனி தேவைக்கதிகமாக நகை சேர்க்க மாட்டேன். இனி, வணிகமயமான மருத்துவமுறைகளை நாட மாட்டேன்’ என்றெல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கைகளை எல்லோரும் வகுத்துவிட்டீர்களா?

ஒருவேளை இவ்வாறெல்லாம் நடந்தால், நாட்டில் கருப்புப் பணம் இருக்காது.
எப்போதும்போலத்தான் மக்களது வாழ்க்கைமுறை இருக்குமென்றால், கருப்புப் பணம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது.

என் கருத்துகளுடன் உடன்படுவோருக்கு நான் கூற விரும்பும் சேதி மிகச் சுருக்கமானது.
‘சமூகத்தில் நிகழ்ந்த எல்லா சீரழிவுகளையும் அனுமதித்துவிட்டு,  அச்சீரழிவுகளில் தெரிந்தும் தெரியாமலும் பங்காளியாகவும் இருந்துகொண்டு, சிக்கல்களைக் கண்டு கொந்தளிப்பது வீண் செயல். எப்போது உங்களால் நிறுவனங்கள் இல்லாத வாழ்க்கையைச் சிந்திக்க முடிகிறதோ அப்போதுதான், செல்வம் சேரும். அதுவரை வெறும் காகிதங்களையும் கடன் அட்டைகளையும்தான் வைத்திருக்க வேண்டும்’

’வங்கிகளில் கணக்கு காட்டாமல் இனி பணத்தை வைத்திருக்க முடியாது’ என பெருமிதமாகப் பேசுவோருக்கு ஒரு சிறு தகவல். ‘இந்திய வங்கிகளில் உள்ள வராக் கடன் தொகையின் அளவு 3 இலட்சம் கோடி’. அதாவது,  வாங்கிய கடனைத் திருப்பித் தராத நிறுவனங்களுக்கு இந்தியாவின் அரசு வங்கிகள் இதுவரை வாரிவழங்கிய தொகை, 3 இலட்சம் கோடி ரூபாய். விஜய் மல்லையா போன்ற ‘ஏழைகள்’ அந்தப் பட்டியலில்தான் இருக்கிறார்கள்.

நம்புங்கள், இந்தியாவின் அரசு வங்கிகள் ’முறையாக’ச் செயலாற்றி, கணக்கு கேட்டு, கருப்புப் பணத்தை ஒழித்துக்கட்டப்போகின்றன! அந்த நம்பிக்கையுடன் எல்லோருக்கும் அன்றாட வாழ்க்கையை நடக்கட்டும்!
ஜெய்ஹிந்த்!

Friday, November 4, 2016

செம்மை ம.செந்தமிழன்

ஊர் திரும்புங்கள் எனக் கூறுவது, நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான போராட்ட வடிவம்தான்!

ம.செந்தமிழன்

செம்மை வாழ்வியல் வகுப்பின்போது, மக்கள் கேட்ட சில கேள்விகளும் அவற்றுக்கான எனது விளக்கங்களும்.

இப்பொழுது எல்லாம் கடைகளில் வாங்கும் காய்கறிகள், அரிசி, போன்றவற்றில் அதிகமான உரம் ரசாயனம்   இருக்கிறதே அதற்கு என்ன செய்ய வேண்டும்?

- விவசாயம் என்றாலே இயற்கையாகச் செய்வது தான். இரசாயன வேளாண்மையா இயற்கை வேளாண்மையா என்பதே தவறு. இரசாயனம் சேர்த்து செய்தால் அது வேளாண்மையே இல்லை. விவசாயம் என்றாலே இரசாயனம் கலக்காமல் விளைவிப்பது தான். அப்படி விளைவது தான் நல்ல காய்கறிகள். அது கிடைக்காத நிலைமைக்கு நாம் இப்பொழுது வந்து விட்டோம். பணம் இருந்தால் கூட நல்ல காய்கறிகள் கிடைக்காத வறுமையில் உள்ளோம்.

நஞ்சு இல்லாத உணவு வேண்டும் என்பது பெரிய புரட்சி இல்லை நமது அடிப்படை உரிமை. நாம் மிக மோசமான இடத்தில் உள்ளோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நஞ்சு இல்லாத காய்கறிகள் வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒரு நாளில் ஒரு லட்சம் பேருக்கு கூட காய்கறிகள் கிடைக்காது. கடல் மீன் கூட நஞ்சு இல்லாமல் கிடைப்பது இல்லை அணுக்கழிவுகள் முழுவதையும்  கடலில் தான் கொண்டு போடுகிறார்கள்.

இந்த நிலைமைகள் மாற வேண்டும் என விரும்புங்கள். இயற்கையான சூழல் பெருக வேண்டும், இயற்கையான உணவு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக வைத்துக்கொள்ளுங்கள். வீட்டுத் தோட்டங்களில் கவனம் செலுத்துங்கள். நிலம் வைத்திருப்போர், இயற்கை வேளாண்மையில் ஈடுபடுங்கள். எவராவது நமக்கு உற்பத்தி செய்து தருவார், நாம் அதை சாப்பிடலாம் என்ற நினைப்பிலிருந்து வெளியேறுங்கள். நிலம் இல்லாதோர், இயற்கை விளைபொருட்களைத் தேடி வாங்குங்கள்.

நஞ்சில்லா காய்கறி வாங்க வழி உள்ளதா?

- இயன்றவரை, அவரவருக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்து கொண்டால் தான் இதற்கு எல்லாம் மாற்று கிடைக்கும் 

விதை பற்றாக்குறை உள்ளதா?

அது அடுத்த கட்ட பிரச்சனை , உள்ள விதைகளுக்கே இன்று விவசாயம் செய்ய ஆள் இல்லை. சாதாரண செயல் திட்டம்தான் , பசுமைப் புரட்சியோ , வெண்மைப் புரட்சியோ இல்லை . சில காலத்திற்கு முன், நூற்றுக்கு எண்பது பேர் விவசாயம் செய்தார்கள். அவர்கள் தங்களுக்கான உணவையும் மீதமுள்ள இருபது பேருக்கான உணவையும் உற்பத்தி செய்தார்கள். இதைப் பெரும் வியாபாரமாக  மாற்ற நினைத்துதான் பசுமைப் புரட்சி என்ற கொடிய திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். எண்பது சதவீதமாக இருந்த விவசாயிகள் இப்போது ஏறத்தாழ அறுபது சதவீதமாகக் குறைந்துவிட்டார்கள். இவர்களால், மீதமுள்ள நாற்பது சதவீதத்தினருக்கு இயற்கையான உணவைக் கொடுக்க முடியாது. இயற்கையில், அவ்வாறு விளையாது .

உணவு உற்பத்தி செய்பவர்களை /விவசாயிகளை குறைப்பதுதான் திட்டமா ?

-  ஆம். அதுவே அவர்களது நோக்கம் . உணவு உற்பத்தியை பெரும் உற்பத்தியாக மாற்றவேண்டும், 5 சதவிகிதம் பேரே உணவு உற்பத்தி செய்ய வேண்டும். மீதமுள்ள 95 சதவிகிதம் பேரும் இந்த 5 சதவிகிதம் பேரையே உணவுக்காக
நம்பி இருக்கவேண்டும் . இவ்வாறு மாற்றுவதே திட்டம். இது அழகாக நடந்தேறி வருகிறது .இதைத் தடுக்கவே நாம் ஊர்திரும்புங்கள் ஊர்திரும்புங்கள் என்று கூறுகிறோம். இது சேவை அல்ல , தேவை.

உங்களுக்கு  தேவையானதாவதையாவது உற்பத்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மட்டுமாவது செய்து கொள்ளவேண்டும்.

அவ்வளவுதான் ஒருவரால் செய்ய முடியும். மறுபடியும் மறுபடியும் இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்து தருவார்கள் அவர்களிடம் நாம் இருபது ரூபாய் அதிகம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்று எல்லாம் நினைத்து கொண்டு இருந்தால் அதுவெல்லாம் நடக்காது. ஊர் சந்தைக்கு காய்  வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. விவசாயிகள் சொல்கின்ற விலை தான் கொடுக்கின்றோம். அவர்கள் இடத்தில் போய் எடுத்துக்கொண்டு வருகின்றோம். தக்காளி விலை முப்பது ரூபாய் சொல்கிறார்கள். நியாயமாகப் பார்த்தால் அது சரியான விலைதான். ஆனால் இருபது கிலோ தான் தருவேன் என்று சொல்கிறார்கள். ஊர் சந்தைக்கு வரும் கூட்டத்திற்கு ஒருவருக்கு ஒரு தக்காளி என்றால் கூட பற்றாக்குறையாக தான் இருக்கும்.

நாம் நடத்தும் ஒரு சின்ன சந்தைகே இவ்வளவு பற்றாக்குறை. நமக்கு நிறைய தொடர்புகள் உள்ளன.  கேட்டவுடன் வாங்கிக் கொடுப்பதற்கு நண்பர்கள் இருக்கின்றார்கள்.  பணம் இருக்கின்றது, வாங்குவதற்கு மக்கள் இருக்கின்றார்கள்.  அனைத்தும் இருந்தும் வாங்குவதற்கு காய்கறிகள் கிடைக்கவில்லை. ஊர் சந்தைக்கு வரும் அறநூறு எழுநூறு குடும்பங்களுக்கே காய் வாங்குவதில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் பொழுது ஏழு கோடி மக்களுக்கு என்ன செய்வது?

சென்னையிலேயே வாய்ப்பு இருக்கின்றவர்கள் சொல்லுங்கள் மாடியிலேயே தோட்டம் போடுவோம். முதலில் வெளி ஊரிலிருந்து காய்கறிகள் வரக்கூடாது என்ற முடிவை எடுத்து கொள்ளவேண்டும்.

வாய்ப்புள்ளோர் ஊர் திரும்புங்கள். வாய்ப்பில்லாதோர் வீட்டுத் தோட்டங்கள் அமையுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால், ஏழை எளியோருக்கும் இயற்கை உணவுகள் கிடைக்கும். இல்லையெனில், இயற்கை உணவு என்பது பணக்காரர்களுக்கான சந்தையாக மட்டுமே இருக்கும். அவ்வாறான நிலைமை நாம் வாழும் காலத்தில் உருவானால், அது நாம் செய்யும் பெரும் பாவம் என நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் எல்லாவற்றையும் சம்மாகப் படைத்த இறைக்கு மன்சாட்சிப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும். எனக்குள் இந்த அச்சமும் அக்கறையும் உள்ளது.

ஓரளவு செல்வம் உள்ளோர் இதைப் புரிந்துகொண்டு செயலாற்றினால், நம்மைச் சுற்றியுள்ள எளியோருக்கு நல்ல உணவு கிடைப்பதை உறுதி செய்ய இயலும்.

நாங்கள் 2012இல் உணவு திருவிழா ஓசூரில் நடத்தினோம். அது தான் தனியார் அமைப்பு நடத்திய முதல் பெரிய உணவுத் திருவிழா. அப்பொழுது விகடனில் அதை பற்றிய ஒரு பேட்டி வந்து இருந்தது. அப்பொழுது பூங்கார் இருபது ரூபாய், காட்டுயானம் வாங்குவதற்கு யாரும் இல்லை. அனால் இன்று பூங்கார் எழுபத்து ஐந்து ரூபாய். இதை எத்தனை மக்களால் வாங்க முடியும்? வாங்க முடியாது. எழுபத்து ஐந்து ரூபாய்க்கு விற்றாலும், இயற்கை விவசாயிக்குக் கட்டுப்படி ஆகுமா? அவர்களுக்கும் ஆகாது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்றால் கூட இயற்கை விவசாயிக்கு ஆதாயம் இல்லை. இதுதான் பொருளாதாரம்.

இவ்வளவு மோசமான நிலைமை உணவிற்கு. அரிசி நஞ்சு இல்லாமலும் இருக்க வேண்டும் அதிகமான விலையும் இருக்கக் கூடாது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும்.

ஜூலை மாத ஊர் சந்தையில் பொது உரிமை அங்காடி என்று ஒன்று அறிமுகம் செய்தோம். ஒரு கிலோ அரிசி அறுபத்தி ஐந்து ரூபாய் அடக்க விலை அப்போது இருந்தது. நான்குஇ ரூபாய் கூடுதலாக வைத்து, ஒரு கிலோ 72 ரூபாய்க்கு விற்றால்,  யாரால் அரிசி வாங்கி செல்ல முடியும்?

வாங்குபவர்களுக்கும் லாபம் இல்லை விற்பவர்களுக்கும் லாபம் இல்லை. இதை முதலில் மாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு லாரி வாடகைக்கு எடுத்து ஐநூறு கிலோ அரிசி கொள்முதல் செய்து அதை ஐம்பத்தெட்டு  ரூபாய் என்று விற்றோம். ஆனால் அதற்கு அடக்க விலை ஐம்பத்தைந்து  ரூபாய் வந்தது. இப்படி வேலை செய்தே  ஐம்பத்தி எட்டு ரூபாய்க்குத்தான்  இயற்கை அரிசி கிடைக்கின்றது . சிப்பம் சிப்பமாக மக்கள் வாங்கி கொண்டு சென்றார்கள். ஒரு கிலோ வாங்கியவர்கள் இருபத்தி ஐந்து கிலோ வாங்கினார்கள்.

இதில் இரண்டு ரூபாய் தான் ஊர் சந்தைக்கு லாபம். செம்மைச் சமூக மக்களின் உழைப்பைக் கணக்கிட்டால், அதுவும் இருக்காது. இதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. முடிந்தவர்கள் உற்பத்தியில் ஈடுப்பட வேண்டும். பகுதி நேரமாவது ஈடுப்பட வேண்டும். சம்பாதிக்கும் பணத்தில் முதலில் ஒரு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும். அதிகமாக கூட இல்லை முதலில் ஒரு ஏக்கர் வாங்கினாலே போதும். அதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.

ஊர் திரும்புதல் பற்றி பேசும்போதோ அல்லது வேளாண்மை பற்றி பேசும்போதோ நிறைய கேலிகளுக்கு உள்ளாகின்றோம். என்னையும் தனி பட்ட முறையில் நிறைய பேர் கேலிசெய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஊர் திரும்புங்கள் என நான் கூறுவது, இக்காலத்திற்கான சமூகப் போராட்டத்தின் வடிவம்தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். நமது நிலங்களை வைத்து அவர்கள் சூதாட்டம் நட்த்தும்போது, நாம் நம் நிலங்களுக்குத் திரும்புவதுதானே சரியான போராட்டமாக இருக்க முடியும்!

போராட்டம் என்பது வாழ்வியல் நடைமுறைகளில் இருக்க வேண்டும் என்ற கொள்கையைத்தான் நான் நம்புகிறேன். அதைத்தான் மக்களிடம் பரப்புகிறேன். அதைத்தான் நானும் செம்மைக் குடும்பத்தினரும் செயல்வடிவமாக மாற்றிக்கொண்டுள்ளோம்.

நாங்கள் வெறும் பிரசாரம் செய்வோர் இல்லை, செயல் வடிவம் கொடுக்கிறோம்.

‘எங்கள் தாகத்திற்குத் தண்ணீர் இல்லை, நல்ல உணவு இல்லை, காற்றும் இல்லை. நீங்கள் எல்லோரும் என்ன செய்து கிழித்தீர்கள்?’ என என் சந்ததி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கும் நிலைமை உருவாகக் கூடாது என்பது என் விருப்பம். அந்த விருப்பத்தின் கட்டளைக்கேற்ற செயல் வடிவங்களில் ஒன்றுதான் ‘ஊர் திரும்புங்கள்’ என்பது.